நான் மௌன அலை... நீ இசைக்கரை... - 1
“என்ன டூட்... உங்க ஹஸ்பண்டுக்கு கால் பண்ணி
சாப்பிட்டாங்களான்னு கேக்கலையா?” என கமலேஷின் முதுகைத் தட்டியவாறே அலுவலக கேன்டீன்
நாற்காலியில் வந்தமர்ந்த ராஜேஷை விழிகளை உருட்டிப் பார்த்தான் அந்த அலுவலகத்தில் புதிதாகப்
பணியில் சேர்ந்திருக்கும் பிரவீன்.
அதிர்ச்சி தாளாமல், “வாட் ப்ரோ? ஹஸ்பண்டா?? என்ன சொல்றீங்க?
இந்தியாவுல இது நார்மலைஸ் ஆகிடுச்சா என்ன?” என பிரவீன் தனது சந்தேகத்தை சற்றும்
தாமதமின்றிக் கேட்டுவிட,
ராஜேஷை முறைத்தான் கமலேஷ்.
“இப்படி எல்லாரும் இருக்கிற இடத்திலே டீஸ் பண்ணாதேன்னு
எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்...” என்கிற ரீதியில் அவனது பார்வை இருக்க, “சாரி... அது உங்க பர்சனல்... நான்தான் இங்கிதமில்லாம
கேள்வி கேட்டுட்டேன் போல.. சாரி.. சாரி...” எனப் பதற்றத்துடன் எழுந்து செல்ல
முற்பட்ட பிரவீனின் கையைப்பிடித்து அமரவைத்த கமலேஷ்,
“ப்ரோ... இவன் என் ஒய்ஃபைத்தான் அப்படி சொல்றான்...” என விளக்கமளிக்க முன்வந்தான்.
நம்பாத பார்வையுடன் பிரவீன் ராஜேஷைப் பார்க்க, “யெஸ் ப்ரோ... மேடம் இவருக்குன்னு எந்த
வேலையும் வைக்கிறது கிடையாது... எல்லா வேலையும் அவங்களே செஞ்சிடுவாங்க... இவருதான்
அப்பப்போ கால் பண்ணி நானும் இருக்கறேன், என்னையும் கவனின்னு
கெஞ்சிட்டு இருப்பாரு... அதனாலதான் சும்மா டீஸ் பண்ணுவோம்.. நீங்க பெருசா டென்ஷன்
ஆகாதீங்க...” என்றான் அவன்.
“நான் ஜட்ஜ் பண்ணல... ஜஸ்ட் கேட்டேன்.. தப்பா
எடுத்துக்காதீங்க...” என்ற பிரவீனுக்குப் புன்னகையொன்றை பதிலாகத் தந்தவாறே “Boss Baby” என
பதியப்பட்டிருந்த தனது மனைவியின் எண்ணுக்கு அழைத்தான் கமலேஷ்.
“கரோலின்...” என தன்மையான விளிப்புக்கு, “என்ன?” என சற்று எரிச்சலுடனே பதில்தந்தாள் அவனது
இல்லாள்.
“இன்னும் கோபமாத்தான் இருக்கிறியா? சாப்பிட்டியான்னு
கேட்கத்தான் கால் பண்ணுனேன்...” என இவன் தணிந்த குரலில் வினவ, “ப்ச்...” என்றவள் அழைப்பைத்
துண்டித்துவிட்டாள்.
சற்று அயர்வுடன் நிமிர்ந்த கமலேஷைப் பார்த்த இருவரும்
“என்னாச்சு??” என வினவ, “வழக்கமான
மன்த்லி மூட்ஸ்விங்ஸ்தான்... கூடவே ஒர்க்ல ஏதாவது டென்ஷனா இருக்கும்...” என
இயல்பாகவே பதில்தந்தான்.
“ரொம்ப கேஷுவலா சொல்றீங்க ப்ரோ? என் ஒய்ஃப் கொஞ்சமா வாய்ஸ்
ரெயிஸ் பண்ணினாலே நானெல்லாம் டென்ஷன் ஆகிடுவேன்... நீங்க இவ்ளோ ச்சில்லா
எடுத்துக்கறீங்க?” என்ற பிரவீனுக்கு, “அவங்க ஏதாவது பிஸியா இருந்திருப்பாங்க...
இவன்தான் சொல்றானே, மூட்
ஸ்விங்ஸ்ன்னு... அதான் ரெண்டையும் சேர்த்து எரிச்சல்ல காட்டுறாங்க... மத்தபடி
கரோலின் சச் அ ஒன்டர்ஃபுல் லேடி...” எனக் கூறிய ராஜேஷின் கூற்று விசித்திரமாக
இருந்தது.
“இருந்தாலும் ஆசையா சாப்பிட்டியான்னு கேட்டவனுக்கு ‘ஆமா, இல்லை’ன்னு ஒரு வார்த்தையில பதில்
சொல்லியிருக்கலாம்.. என் வீட்டம்மால்லாம் ஒரு வார்த்தை சாப்பிட்டியான்னு கேட்டியா, மதியம் ஒரு ஃபோன் பண்ணி பேசினியான்னு ஏங்குவா... எனக்குத்தான்
தோணமாட்டிக்குது...” என பிரவீன் சலித்துக்கொள்ள, “இப்ப
தெரியுதா நான் ஏன் கரோலினை இவனோட ஹஸ்பன்ட்ன்னு சொன்னேன்னு...” என கண்ணடித்தான்
ராஜேஷ்.
அவன் இவ்வாறு கூறவும் பிரவீனுக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது.
“எப்பவுமே ரோல் ரிவர்ஸ்தானா ப்ரோ? மீன்ஸ்... நீங்க ஒய்ஃப் மாதிரி, அவங்க ஹஸ்பெண்ட்
மாதிரி கேரக்டரா?” என அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
“ஆக மொத்தத்துல இன்னைக்கு லஞ்ச் டைம் இன்டர்வியூ டைம்...
இல்லையா?” என ராஜேஷ் கேலிசெய்ய, தனக்கு
வந்திருந்த குறுஞ்செய்தியை நாணத்துடன் காண்பித்தான் கமலேஷ்.
“நான் சாப்பிட்டேன்... நீங்க பண்ணின சாம்பார், பீட்ரூட்
பொரியல் ரொம்ப நல்லா இருந்துச்சு... சீரியஸ்லி நான் பண்றதைவிட நல்லா
இருந்துச்சு... அதுவும் நான் பொரியலுக்கு ரெட்ச்சில்லிதான் போடுவேன்... நீங்க
பெப்பர் போட்டிருக்கிறீங்க... அண்ட் சாரி... ஏதோ ஒரு டென்ஷன்ல கட் பண்ணிட்டேன்...
இங்கே கொஞ்சம் ஒர்க் அதிகம்... ஃப்ரீ ஆனதும் டெக்ஸ்ட் பண்றேன்... லவ் யூ...” என
அவனது Boss Baby
அனுப்பியிருக்க, “இப்போதான் கல்யாணமாச்சுதா ப்ரோ?” என அடுத்த
சந்தேகம் வந்துவிட்டது பிரவீனுக்கு.
“ப்ரோ... ரெண்டு பசங்க இருக்கிறாங்க... பையன் UKG, பொண்ணு PreKG...” என
கமலேஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி சிணுங்கியது.
“அத்தான்... இன்னைக்கு ஈவ்னிங் சாரீ வாங்கணும்ன்னு
சொல்லியிருந்தேன்ல... அக்காகிட்டே சொல்லிட்டீங்களா? 6 மணிக்கு ஷாப்க்கு
வந்திடுவீங்கதானே?!” என எதிர்முனையில் பேசியவன் வினவ, “உன் அக்காகிட்டே சொல்றதுக்கு
மறந்துட்டேன்டா...” என நாக்கைக் கடித்தான் கமலேஷ்.
“என்ன அத்தான் நீங்க... பொறுப்பே இல்லாம இருக்கிறீங்க?” என
உரிமையுடன் கடிந்து கொண்டவனை, “ரொம்ப
பேசாதேடா... அவளை அழைச்சிட்டு வந்துடுவேன்... கூல்... பசங்க?” என இயல்பாக்கினான்.
“ரெபேக்கா பிக்அப் பண்ணிடுவா... நீங்க உங்க பாஸ் பேபியை
பிக்அப் பண்ணிட்டு கரெக்ட் டைமுக்கு வந்து சேருற வழியைப் பாருங்க...” எனக்
கூறிவிட்டு கமலேஷின் மைத்துனன் அழைப்பைத் துண்டித்துவிட, “உங்க ஒய்ஃபோட தம்பியா ப்ரோ? உங்களுக்கு
கால் பண்றாரு!! அவங்க அக்காவுக்கு கால் பண்ணி பேசமாட்டாரா?” என அடுத்ததாக வினா அம்பை
எய்தான் பிரவீன்.
“ராசா... கேள்விகளின் நாயகனே! இங்கேதானே ஒர்க் பண்ணப் போற? உலகம்
இன்னைக்கு சாயந்தரமே அழிஞ்சிடப் போறதில்லையே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணா கேளு...
இப்போ சாப்பிடு சாமி!” என ராஜேஷ் கையெடுத்துக் கும்பிட, சிரித்துவிட்டனர் மற்ற இருவரும்.
“சன்டே ஈவினிங் ஃப்ரீயா இருந்தா உங்க வீட்டம்மாவை
அழைச்சிட்டு எங்க வீட்டுக்கு வாங்க பிரவீன்... நிறைய பேசலாம்.. உங்க ஒய்ஃப்
பார்த்ததுமே கரோலின்கிட்டே ஒட்டிக்குவாங்க... அப்புறமா பாருங்க.. உங்க ரிலேஷன்ஷிப்
எப்படி பூத்துக்குலுங்குதுன்னு... சலிப்பு, சண்டை, சச்சரவுன்னு எதுவுமே இருக்காது..” என கமலேஷ்
தனது இல்லாளைக் குறித்து பெருமிதமாக உரைத்தான்.
“இப்படி நீங்க பில்டப் பண்ணும்போதுதான் எனக்கு அவங்களைப்
பத்தி நிறைய தெரிஞ்சிக்க தோணுது...” என்றவன், திடீரென நினைவு வந்தவனாக, “ப்ரோ... நாங்க உங்க ஒய்ஃப்
பத்தி கேள்வியா கேட்டுட்டு இருக்கிறதை தப்பா எடுத்துக்கலைல்ல...” என சங்கடத்துடன்
அவன் முகம் நோக்க, “காமெடி பண்ணாம சாப்பிடுங்க ப்ரோ...”
என்றவாறே தன்னவளுக்கு குரல் குறுஞ்செய்தி அனுப்பினான் கமலேஷ்.
“கண்ணம்மா... ஐசக் கால் பண்ணியிருந்தான்.. என்கேஜ்மென்ட்க்கு
ட்ரெஸ் வாங்குறதுக்கு போகலாம்ன்னு அப்பவே சொன்னான், நான்தான் மறந்துட்டேன்... பசங்களை அவனே பிக்அப் பண்ணிக்கிறானாம்...
நீ வெயிட் பண்ணு... நான் இங்கேயிருந்து கிளம்புறப்போ கால் பண்றேன்...” எனப்
பேசிவிட்டு நிமிர்ந்த கமலேஷ், பிரவீனின் ஆர்வம் ததும்பிய
விழிகளைப் பார்த்ததும், “அவ காலேஜ்ல ஹெச்ஒடியா இருக்கிறா,
பிரவீன்...” என்றான் சற்றே கர்வத்துடன்.
“ரியலி!!” என கண்களை அகலவிரித்த பிரவீனின் முதுகில்
வலிக்காதவண்ணம் தட்டிய ராஜேஷ், “இன்னைக்கு
கோட்டா ஓவர்... அடுத்த கேள்வியை நாளைக்கு கேளு... இப்போ எழுந்து போய் வேலையைப்
பாரு... இல்லைன்னா HRக்கு மெயில் போட்டுடுவேன்..” எனப்
போலியாக மிரட்ட, எழுந்து ஓடிவிட்டான் பிரவீன்.
அவன் சென்ற பிற்பாடு தனது தோழனைப் பார்த்தவன், “எப்படிடா இப்படி இருக்கிற? அவன் கரோலினைப்
பத்தி இவ்ளோ கேக்கறான், நீ கேஷுவலா பதில் சொல்ற?” என ஆச்சரியமாக வினவ, “அவன் கேஷுவலா கேட்டான், நான் கேஷுவலா பதில்
சொன்னேன்... அவ்ளோதான்.. அண்ட் ஒன் மோர் திங், அவன் கேட்டதுல
தப்பா எடுதுக்கிறதுக்கு எதுவுமில்ல... இன்னும் சொல்லப்போனா என் கரோலினை அவ்ளோ
நம்புறேன், அதைவிட அதிகமா அவளை லவ் பண்றேன்... நீ டென்ஷன்
ஆகாதே!” என வெகுஇயல்பாகக் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
அலுவகத்தின் வேலைநேரம் முடிந்த பின்னர் தனது மனைவிக்கு
அழைத்த கமலேஷ், “வேலை முடிஞ்சதாம்மா? நான் வரவா?” என வினவ, “முடிஞ்சதுப்பா... நீங்க வாங்க...” என
இயல்பாகப் பேசினாள்.
காரில் அவள் பணிபுரியும் கல்லூரிக்குச் சென்றவன், அவளது எண்ணிற்கு அழைப்பதற்குள் அவளாகவே
கதவைத் திறந்துகொண்டு உள்ளே அமர்ந்தாள்.
“கால் பண்ணின நேரத்துல இருந்து இந்த நேரத்துல ரீச்
ஆகிடுவேன்னு கரெக்டா எஸ்டிமேட் பண்ணிடற... நீ செம ஷார்ப்புடா...” என அவன் புகழாரம்
சூட்டுவதற்குள், கன்னத்தில் பரிசு
கிட்டியிருந்தது.
புருவங்களை நெரித்தவன் மகிழ்ச்சியை காட்டிக்கொள்ளாமல், “இது என்ன? மதியம் கோபப்பட்டதை
சரிக்கட்டுறதுக்கு லஞ்சமா?” என போலியான கோபத்துடன் கேட்க, “ஹான்?!”
என ஒற்றைப் புருவமுயர்த்தி வினவினாள் அவன்.
அதைக் கண்டவனது பொய்க்கோபம் சற்றே தளர்வடைய, “ஹே... நீ முதல்ல புருவத்தை இறக்கு...”
என்றான் தோல்வியை ஒப்புகொள்ளாமல்.
“நான் ஏத்திவிடலையே! அதுவுமில்லாம அது எங்கே ஏறி இருக்குதுன்னே
தெரியாம எப்படிப்பா இறக்குறது?” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவளின் பேச்சில்
ஒட்டுமொத்த போலியான கோபமும் ஆட்டம்கண்டு, தகர்ந்து, கரைந்து, காதல் மேற்கொள்ளத் துவங்கியிருந்தது.
“சரி.. சரி... சீட் பெல்ட் போட்டுக்கோ...” என்றவன் காரை
செலுத்தத் தொடங்க, அவளாகவே
இயல்பாக விவரிக்கத் தொடங்கினாள்.
“இன்னைக்கு காலேஜ்ல ஒரு இஷ்யூடா... தேர்ட் இயர்க்கும் ஃபைனல்
இயருக்கும் சண்டை... பிரின்சிபால் வேற லீவ் போட்டுட்டாரு... ரெண்டு கும்பலும்
தரையில உருண்டு சண்டை போடறானுங்க... என்னன்னு விசாரிச்சா இவன் லவ் பண்ற பொண்ணுக்கு
அவன் இன்ஸ்டாகிராம்ல ரெக்வெஸ்ட் கொடுத்தானாம், அவ அக்செப்ட் பண்ணினதும் ‘hi’ன்னு அனுப்பினானாம்...
இவனுங்களை என்கொயரி பண்ணி, சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு...” என
அவள் விவரித்து முடிக்க, இவனோ குறும்பாக நோக்கினான்.
அவள் புரியாமல் பார்க்க, “இந்த ஆக்ஷன் சீக்வென்ஸ்ல ரொமான்டிக் ஸீன் எப்போ நடந்துச்சு?? மீன்ஸ்... இவ்ளோ ரணகளத்திலேயும் புருஷனுக்கு முத்தம் கொடுக்கிறதுக்கு தோணியிருக்குதுன்னா
ஒர்த்தா இன்னொரு இன்சிடென்ட் நடந்திருக்குதுன்னுதானே அர்த்தம்!” எனக்
கண்ணடித்தான்.
“கேடி!” என அவனது தோளில் இடித்தவள், “ரொம்ப டென்ஷனா
இருந்துச்சுதுன்னு ஒரு டென் மினிட்ஸ் ரீல்ஸ் பார்த்தேன்... எதேச்சையா ஏதோவொரு மூவி
ஸீன் வந்துச்சு...” எனக்கூற, “அதான
பார்த்தேன்... உனக்கெல்லாம் B.Rom., பேச்சிலர்
இன் ரொமான்ஸ்ன்னு தனி கோர்ஸ் நடத்தினாலும் வராதேன்னு...” எனக் கேலிசெய்தான்.
“ஓஹோ.. அப்போ அங்கே மட்டும் Ph.D. in Romanceஆ? அங்கேயும் இந்த லெவல்தான்... கிண்டல் பண்ணாம வண்டியை ஓட்டுங்க...”
என்றவள் கார் கியரில் பதிந்திருந்த அவனது கரத்தின்மீது தனது கரத்தைப் மென்மையாகப்
படரவிட்டவாறே தோளில் சாய்ந்துகொள்ள, “லவ் யூ கண்ணம்மா...” என
முணுமுணுப்புடன் உச்சியில் இதழ்பதித்து, ஆக்சிலரேட்டரில்
பாதம் பதித்தான்.
கரோலினின் தமையனான ஐசக்கின் திருமண நிச்சயதார்த்த
நிகழ்விற்கு பட்டாடைகள் வாங்குவதற்காவே இருவரும் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஐசக் – ரெபேக்கா இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து
பெற்றோரின் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணையக் காத்திருக்கின்றனர். கரோலின்
கல்லூரியில் பணிபுரிய, அவளது
கணவன் கமலேஷ் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான். பிரபல மின்னணுவியல்
நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஐசக், மருத்துவரான ரெபெக்காவை மணம்புரியவிருக்கிறான்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர்களது பெற்றோர்
இருவரும் தங்களது கிராமத்தில் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டு கால்நடைகளையும்
பராமரித்து வருகின்றனர். பெற்றோரைப் பெருமைப்படுத்தும் வகையில் பிள்ளைகள் வாழ்வில்
முன்னேறியதில் இருவருக்கும் பெருத்த மகிழ்ச்சி!
மருமகனான கமலேஷ் அவர்களை தனது பெற்றோர்போல அன்புடன் நடத்த, புதிதாக இவர்களது குடும்பத்தில்
இணையவிருக்கும் ரெபேக்காவும் வெகு கனிவுடன் நடந்து கொள்வது அவர்களுக்கு மகிழ்ச்சியாக
இருந்தது. திருமணத்திற்குப் பின்னர் தான் அவர்களது கிராமத்திலேயே பணிசெய்ய
விரும்புவதாக அவள் தெரிவிக்க, ஐசக்கோ தனது பணிகளைத் தாண்டி, தனக்கேற்ற ஒரு வேலையை சொந்த ஊரிலேயே எவ்வாறு ஸ்தாபித்து, வளரச்செய்வது என யோசனைகளை மேற்கொண்டிருக்கிறான்.
தம்பதிகள் தமையன் குறிப்பிட்டிருந்த துணிக்கடைக்குச் செல்ல, “அம்மா...” என ஓடிவந்து காலைக்
கட்டிக்கொண்டான் இவர்களது ஐந்து வயது மகன் ஹ்ரித்திக். “கண்ணா...” என
உற்சாகத்துடன் அவனைத் தூக்கி, இரு கன்னங்களிலும்
முத்தமிட்டவள், “சாப்பிட்டியா தங்கம்?” எனக் கேட்க, “ஹான்... சாப்பிட்டேனே! அத்தை பால் கொழுக்கட்டை வாங்கிக் கொடுத்தாங்க...”
என்றான் தன் மழலை மொழியில்.
அவனது பதிலில் புன்னகைத்தவள், “அப்பவே வந்துட்டீங்களா?” என ரெபேக்காவிடம் கேட்க, “இப்போதான்... ஒரு டென் மினிட்ஸ் ஆச்சுது அண்ணி... அண்ணா உங்ககிட்டே
சொல்ல மறந்துட்டாருன்னதும் நீங்க வருவீங்களோ மாட்டீங்களோன்னு உங்க தம்பி
புலம்பிட்டே இருந்தாரு...” என்றாள் அவள்.
“அவனுக்கு புலம்புறதைத் தவிர வேற என்ன தெரியும்?” என
முணுமுணுத்தவளை முறைத்தவாறே வந்த ஐசக், “ஜோஹன்னா... உன் அம்மாவுக்கு டூ விடு... மாமாவைத் திட்டுறாங்க...” என
கையில் வைத்திருந்த தனது மூன்று வயது மருமகளிடம் பேசினான்.
“பேட் மம்மி... எப்பவும் மாமாவை திட்டுற... டூ...” என
மழலையாகப் பேசிய தன் மகளை ரசித்த கமலேஷ், “வாங்க... போய் ட்ரெஸ் பார்க்கலாம்...” என அழைத்துச் சென்றான். அனைவரும்
சிரித்துப் பேசி, ஒருவரையொருவர் சீண்டியவாறே நிச்சயதார்த்த
நிகழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கி முடித்தனர்.
“போற வழியில டின்னர் முடிச்சிட்டு, சர்ச்க்குப் போயிட்டு
போகலாமே!” என ரெபேக்கா தெரிவிக்க,
அனைவரும் ஒருமனதாக சம்மதித்தனர்.
மகிழ்வுடன் இறைவனை பிரார்த்தித்துவிட்டு காரில்
திரும்புகையில் ரெபேக்காவின் முகம் வாடியிருப்பதைக் கவனித்துவிட்டாள் கரோலின். “கேட்போமா
வேணாமா?” என்னும் யோசனையுடன் இருந்தவள், சற்று நேரத்திற்குப் பின்னர், “ஏதாவது பிரச்சனையாடா?
புடவை பிடிக்கலையா? ஏன் டல்லா இருக்கிற? வேணாம்ன்னா சொல்லு... மாத்திக்கலாம்...”
எனக் கேட்டுவிட்டாள்.
“ப்ச்... அதெல்லாம் ஒண்ணுமில்ல...” என மறுத்துவிட்டவள்,
மேலும் சில முறைகள் கேட்டும் காரணத்தை தெரிவிக்காமல் சாதித்துவிட்டாள்.
கரோலின் – கமலேஷ் இருவரும் தங்களது குழந்தைகளுடன் வீடு
திரும்ப, குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு தன்னவளிடம் வந்தான் அவன்.
“கண்ணம்மா... ஃபிரஷ்அப் ஆகிட்டு வர்றேன்...” என
பின்னாலிருந்து அணைத்தவாறே முத்தமிட்டுவிட்டுச் செல்ல, சற்று யோசனையுடன் அமர்ந்திருந்தவளின்
அலைபேசி சிணுங்கியது.
ரெபேக்காதான் அழைத்திருந்தாள். விரைவாக, அழைப்பை ஏற்று காதில் வைக்க, சற்று உடைந்த குரலில் பேசினாள் அவள். “அண்ணி... எனக்கு இந்த கல்யாணம்
வேணாம் அண்ணி... நிறுத்திடலாம்...” என.
இதைக் கேட்டவளது இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. “என்னடா
சொல்ற? கல்யாணம் வேணாமா?” என சத்தமாக கேட்டுவிட்டவளுக்குள் நிமிடத்தில் பல
எண்ணங்கள் சுழன்றடித்தது. “இதுவரைக்கும் எந்தப் பொருளையும் கேட்டு அடம் பண்ணாதவன்
என் தம்பி! முதன்முறையா ரொம்ப ஆசைப்பட்டது இவளை மட்டும்தான்... இது தெரிஞ்சா
என்னாவானோ? இவ்ளோ நாள் இல்லாமல் ஏன் திடீர்ன்னு வேணாம்ன்னு சொல்றா? நல்லா தெளிவா
யோசிக்கிறவ வேணாம்ன்னு சொல்ற அளவுக்கு என்னாச்சு?” என சிந்தித்தவளுக்கு தலையைச்
சுற்றிக்கொண்டு வந்தது.
இசை ஒலிக்கும்...
கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு அப்புறமா கதை எழுதத்
தொடங்கியிருக்கிறேன் மக்களே! எப்படி வரப்போகுதுன்னு தெரியல... வழக்கம்போல உங்க
கருத்துகள் மற்றும் அன்பால தொடர்ந்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கறேன்.. முடிஞ்ச
அளவு தினமும் எபிசொட் தர ட்ரை பண்றேன்... நன்றி!
0 Comments